ஆள் நடமாட்டம் அதிகமில்லாத அந்த சாலையில் சிவாவும், ரமேஷும்
தீவிரமாக எதைப்பற்றியோ சண்டை போட்டுக் கொண்டிருக்கின்றனர். அவர்களுக்கு அருகே, பயந்தவாறு
கலைந்த தலையுடனும், கிழிந்த ஆடைகளுடனும் ஒரு இளம்பெண் நின்று கொண்டிருக்கிறாள்!
சிவா : மச்சா...
சொன்னாக் கேளு, என்னாலயெல்லாம் இந்த
மாதிரி தப்பு பண்ண முடியாது...
ரமேஷ் : நீதான சொன்ன, இவ ரொம்ப நாளா தொந்தரவு
பண்ணிகிட்டு இருக்கானு. அதான் சொல்றேன்...
பேசாம போட்டுரு!
அப்போது அந்தப் பெண் ரமேஷை பார்த்து மேலும் பயப்படுகிறாள்
சிவா : டேய்! சொன்னா
புரிஞ்சுக்கடா... இதல்லாம் தப்புடா...
ரமேஷ் : எது, இது தப்பா? இதல்லாம் தப்புன்னா, நாம இன்னும்
எவ்ளோ பண்ண வேண்டியிருக்கு!
சிவா : எனக்கென்னவோ
ஒரு மாதிரியா இருக்குடா, நாமளே
இதையெல்லாம்
என்கரேஜ் பண்ணா நல்லாவா இருக்கு?
ரமேஷ் : எவண்டா இவன்... சரியான கிறுக்கனா இருக்கான்!
இதப்பாரு தம்பி, இந்த மாதிரி சின்ன
விஷயத்துக்கெல்லாம்
யோசிச்சிகிட்டு இருந்தேனா...
ஒன்னும் பண்ண முடியாது!
சிவா : “....”
ரமேஷ் : கடைசியா கேட்கறேன், நா சொன்னா கேட்பியா...
மாட்டியா?
சிவா : கேட்பேன்...
ஆனால்,
ரமேஷ் : சரி, அப்ப யோசிக்காத. போட்டுரு...உன்
நல்லதுக்குத்தான்டா சொல்றேன்...
(பொறுமை இழந்தவனாய்)
டேய், பேசாம போற்றா..
ரமேஷின் பேச்சால், சிவா ஒரு முடிவுக்கு வந்தவனாய், சில வினாடிகள்
அந்த பெண்ணையே முறைக்கிறான்... திடீரென,
வேகமாக, பின்னாலிருந்து...
பர்சை எடுத்து, அதிலிருந்த இரண்டு ரூபாய்
நாணயத்தை, அந்தப் பிச்சைக்காரப் பெண்மணியிடம் நீட்டுகிறான்!
அவளும் அதை வாங்கிக்கொண்டு, “இதுக்கு
இவ்வளவு நேரமா?” என மனதில் நினைத்தவாறே, அந்த இடத்தை விட்டு நகர்கிறாள்.